Sunday, February 01, 2009

நாகேஷ்



இருத்தலின்றி தவித்தலில் நிர்ணயிக்க முடிவதில்லை சோக அளவுகள். நீட்டி குறைத்து வெட்டி ஒட்டி எங்காவது உங்களைப்பற்றிய செய்திகள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும். மீள்வதற்காக பழகிய பழக்கத்தில் வீழ்ந்தபின் மீள்வது கடினமென சொல்லிவிட்டு குடித்து விட்டு வைத்திருந்த கோப்பையில் மிச்சமிருக்கிறது இன்னும் ஒரு துளி. கடல் சேருகின்ற நதிகளாய் கலைஞனாய் தனித்து நின்ற மிச்சத்தின் கடைசித்துளி ஆவியாகி அரூபம் கலந்தது.

நகைச்சுவைத்தவன். நகைச்சுவையில் மிச்சத்தினையும் நகைச்சுவையாய் மாற்றிக்காட்டி உச்சம் என்பதறியாமலே நின்றிருந்த இடத்திலிருந்து எல்லோரையும் கூட்டிக்கொண்டிருந்தவர்.

சாவு செத்துப்போகாத நேரத்தில் இன்னொரு வைரத்தை தனது மணிமுடியில் செருகிச் சென்றிருக்கிறது. கிரீடம் ஜொலித்தித்துக் கொண்டிருக்கும். ஆனால் அங்கு எவரது அரசாட்சியிலும் நீங்கள் மட்டுமே வியக்க வைக்கும் விதூஷகன். இறகுகள் சேர்ந்திருக்கும் எல்லா தேவதைகளும் உங்கள் நகைச்சுவைக்கு மெல்லிய புன்னகையை அடக்க மாட்டாமல் முத்துக்களாய் சிதறிக்கொட்டுவர்.

நாயக பிம்பங்களுக்கு மத்தியில் மெலிந்த உருவத்தினால் அனைவரையும் ஒதுக்கி வைத்து தனித்து திரை முழுக்க பரவி நின்றிருந்த அந்த ஆளுமையிலும் உங்களுக்கான இருக்கைக்கு இனி எந்த போட்டியும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் உங்களுக்கான தனித்த இருக்கையை நீங்களே எல்லா நேரத்திலும் உடைத்தெறிந்து சென்றிருக்கிறீர். எந்த பாத்திரத்தில் நிரம்பினாலும் அளவுகோல்கள் என்பது மற்றவரை சிரித்து தளும்ப வைப்பதில் மாத்திரம்தான் உங்கள் கவனமும் இருந்தது.

தருமியாய், செல்லப்பாவாய், சுந்தரமாய், மாதுவாய் பத்தாம்பசலித்தனமாய் மாறுமிந்த வேடப்பொருத்தங்களில் நான் என்றும் நாகேஷை தேடியதில்லை. நடிப்பை கடமையாய் கொண்டவரிடையே தர்மமாய் கொண்டிருந்தவர்.

உங்களைப்பற்றிய குறிப்புகள் எங்கும் கிடைக்கக்கூடும். ஆனால் குறிப்புகளில் வாழ்ந்தவரில்லை நீங்கள். சிறு குறிப்புகளில் உங்கள் வாழ்வை எழுதி தீர்த்துவிடும் சக்தி எங்கள் யாரிடமும் இல்லை. சேகரித்து வைத்திருந்த முத்தை இழந்து வாழ்வு முடிக்கும் சிப்பியாய் தனித்து மிதக்கிறார்கள் உங்கள் ரசிகர்கள்.

நினைவுகள் தாகம் தீர்க்கும் சக்தி கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் நேற்று உங்கள் திரைப்படத்தை பார்த்து அழுதுக்கொண்டிருந்தேன். உங்கள் நடிப்பை பார்த்து சிரிப்பதை மாத்திரம் விரும்பியவர் நீங்கள். இந்த இடத்திலும் உங்களை தோற்கடிக்க விரும்பாமல் படத்தை பாதியில் அணைத்து விட்டேன். எழுத்துக்களில் உங்களைப்பற்றிய நினைவுகளை என்னால் முழுமையாக்க முடியாத சோகத்திலேயே முற்றுப்பெறாமல் முடிந்து போன வாழ்க்கையின் கடைசிப்பக்கத்தை அவசரமாய் தள்ளி புத்தகம் மூடும் ரசிகனாய் உங்களின் ஆன்மா சாந்தியடைய என்னால் பிரார்த்தனை மாத்திரம் நிச்சயம் செய்யமுடியும்.
ஓய்வெடு எங்கள் தலைவா.. உனக்கான அன்பு கலந்த அஞ்சலிகள் எல்லாரிடமிருந்தும் உன்னை வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.

25 comments:

பினாத்தல் சுரேஷ் on Sunday, February 01, 2009 10:33:00 PM said...

உங்கள் பதிவை எதிர்பார்த்தேன்.

முதல் முறையாக சோகம் கொடுத்தார் நேற்று.

விபூஷகனா, விதூஷகனா?

லேகா on Sunday, February 01, 2009 10:50:00 PM said...

உங்களிடம் இருந்து மிகவும் எதிர்பார்த்த பதிவு.
Body language எனப்படும் விஷயம் முக்கியத்துவம் பெற்றது நாகேஷின் வருகைக்கு பின்னரே.

சென்ஷி on Sunday, February 01, 2009 10:55:00 PM said...

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பினாத்தலாரே.. உண்மைதான். முதன் முறையாக பிரிவென்பதன் அர்த்தத்தினை உணர வைத்து சென்றிருக்கின்றார். வாழும் வரை சிரித்துக்கொண்டிரு என்ற கொள்கையை கொடுத்துவிட்டு மறைந்து விட்டு அவரை நினைத்து அழ வைத்துக்கொண்டிருக்கின்றார். :'(

சென்ஷி on Sunday, February 01, 2009 10:59:00 PM said...

உண்மைதான் லேகா. இவருக்கு முன்பே உடலசைவுகள் கொண்டு நகைச்சுவை செய்தவர்கள் இருப்பினும் அதனை வசன உச்சரிப்புடன் யாரும் நிகழ்த்திக்காட்டியதில்லை.

காதலிக்க நேரமில்லையும், சர்வர் சுந்தரமும், திருவிளையாடலும் அவரது வசன உச்சரிப்பிற்கும் நடிப்பிற்காகவும் பெரும் பெயர் பெற்றிருந்த திரைப்படங்கள்.

அதிலும் சர்வர் சுந்தரத்தில் அவர் தனது தாயாரோடு பேசும் வசனங்கள் இன்று யோசிக்கும் பொழுது கலங்க வைக்கின்றது.. :'(

எம்.எம்.அப்துல்லா on Sunday, February 01, 2009 11:03:00 PM said...

நாகேஷ் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டபோது என்னையறியாமல் உங்கள் நினைவுதான் வந்தது எனக்கு :((

சென்ஷி on Sunday, February 01, 2009 11:14:00 PM said...

எனது குருவாக மனதில் வரித்துக்கொண்டு அவர் வாழும்வரை அவரைப்பற்றிய எந்த ஒரு தகவலையும் எழுதாமலே இருந்துவிட்டு இப்போது அவருக்கான அஞ்சலிகளில் இணைவதை நினைக்கையில் எனக்கு என் மீதே மிகுந்த வெறுப்பு வருகின்றது அப்துல்லா :-(

ஒரு புகைப்படத்தின் மூலம் மாத்திரமே அவரது பிரபலத்தை நான் உபயோகித்தற்கு மாற்றாய் என்னால் என்ன செய்துவிட முடியும் என்ற ஏக்கம் என்னுள் அதிகம் எழுகிறது.

PoornimaSaran on Sunday, February 01, 2009 11:25:00 PM said...

அவரின் மறைவிற்காக வருந்துகிறேன்

மதுரையம்பதி on Monday, February 02, 2009 12:01:00 AM said...

அவர் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.

முரளிகண்ணன் on Monday, February 02, 2009 12:05:00 AM said...

மிக வருத்தமாயிருந்தது செய்தி கேட்டவுடன். பின்னர் நம் அரசுகளின் மீது கோபம் வந்தது. என்ன செய்ய முடியும் நம்மால்? வருந்துவதைத்தவிர?

முரளிகண்ணன் on Monday, February 02, 2009 12:06:00 AM said...

\\ஓய்வெடு எங்கள் தலைவா.. உனக்கான அன்பு கலந்த அஞ்சலிகள் எல்லாரிடமிருந்தும் உன்னை வந்து சேர்ந்து கொண்டிருக்கும்\\

உண்மை

தமிழன்-கறுப்பி... on Monday, February 02, 2009 1:10:00 AM said...

ஆமா மாப்பி நீ பதிவு போடுவன்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன்... என்ன இருந்தாலும் அந்த உடல் மொழியும் சரியான நேரத்திலமைகிற மொழியாடலும் அவருக்கே உரித்த தனித்தன்மைகள்!! இவரை கடைசி வரை பயன்படுத்தியவர்களில் கமலும் ஒருவர்...

ஸ்ரீமதி on Monday, February 02, 2009 9:15:00 AM said...

:((

கானா பிரபா on Monday, February 02, 2009 10:05:00 AM said...

அவர் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.

நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி
http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_31.html

இனியவள் புனிதா on Monday, February 02, 2009 10:39:00 AM said...

அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி
:'( அவரின் ஆத்மா சாந்தி பெறட்டும்!!!

Alien on Monday, February 02, 2009 11:46:00 AM said...

பினாத்தல் சுரேஷ் said...
உங்கள் பதிவை எதிர்பார்த்தேன்.

நானும்.

RVC on Monday, February 02, 2009 1:10:00 PM said...

தமிழ் திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமை நாகேஷ் அவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். நண்பரே தங்களின் பிரிவுத்துயரில் நானும் பங்கெடுக்கிறேன்.

கண்மணி on Monday, February 02, 2009 1:20:00 PM said...

:((
கலைஞர்கள் மரணத்தை வென்றவர்கள்.இருக்கும் போதை விட இல்லாத போது அதிகம் நினைக்கப் படுபவர்களே சாதனையாளர்கள்.நாகேஷும் அப்படிப்பட்ட கலைஞர்.

Saravana Kumar MSK on Monday, February 02, 2009 1:50:00 PM said...

நிச்சயம் ஒரு மாமனிதரை இழந்துவிட்டோம்.. அவரது ஆத்மா அமைதி கொள்ளட்டும்.. அவருக்கு ஒரு பத்மஸ்ரீ கொடுத்திருக்கலாம்..

//சென்ஷி said...
எனது குருவாக மனதில் வரித்துக்கொண்டு அவர் வாழும்வரை அவரைப்பற்றிய எந்த ஒரு தகவலையும் எழுதாமலே இருந்துவிட்டு இப்போது அவருக்கான அஞ்சலிகளில் இணைவதை நினைக்கையில் எனக்கு என் மீதே மிகுந்த வெறுப்பு வருகின்றது அப்துல்லா :-(//

வருத்தப்படாதீங்கண்ணே..

ஆயில்யன் on Monday, February 02, 2009 4:16:00 PM said...

//உங்களைப்பற்றிய குறிப்புகள் எங்கும் கிடைக்கக்கூடும். ஆனால் குறிப்புகளில் வாழ்ந்தவரில்லை நீங்கள். சிறு குறிப்புகளில் உங்கள் வாழ்வை எழுதி தீர்த்துவிடும் சக்தி எங்கள் யாரிடமும் இல்லை. சேகரித்து வைத்திருந்த முத்தை இழந்து வாழ்வு முடிக்கும் சிப்பியாய் தனித்து மிதக்கிறார்கள் உங்கள் ரசிகர்கள்//

உண்மைதான்! நாகேஷின் பிரிவின் செய்தியில் முதலில் நினைவுக்கு வந்தது நீங்கள்தான்!

பதிவும் அதை வெளிப்படுத்தியது :(

சுல்தான் on Monday, February 02, 2009 5:18:00 PM said...

ஒரு சிறந்த கலைஞன் நாகேஷ். தம் துன்பியல் வாழ்வியலிலும் இன்பியலையே நடித்துக் காட்டி பெருதற்கரிய பெயர் பெற்ற பேரு பெற்றவர். தமிழ் திரையுலகில் அவர் பெயர் நீள் நின்று நிலைக்கும்.

உங்கள் பதிவை நானும் எதிர்பார்த்தேன்.

நாகை சிவா on Monday, February 02, 2009 5:40:00 PM said...

ஆழ்ந்த அனுதாபங்கள் :(

பாச மலர் on Monday, February 02, 2009 6:08:00 PM said...

உங்கள் பதிவை நானும் எதிர்பார்த்தேன்..சென்ஷி..

அவருக்கு என் அஞ்சலி

கவிதா | Kavitha on Tuesday, February 03, 2009 6:56:00 PM said...

:((

rapp on Monday, February 09, 2009 7:19:00 PM said...

நானும் எங்கக்காவும் இவரை மூணு வருஷம் முன்ன நேர்ல பாத்து ஆட்டோகிராப் வாங்கினோம். இன்னும் பத்திரமா வெச்சிருக்கோம். அவ்ளோ அழகா சிரிச்சி, வாழ்த்தி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

rapp on Monday, February 09, 2009 7:20:00 PM said...

முடிஞ்சா கானாபிரபா சார் கொடுத்திருக்க சுட்டியை பதிவில் சேருங்களேன்

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com