Thursday, December 01, 2011

போராளி - திரைவிமர்சனம்

7 comments


உங்களையெல்லாம் பாக்கும்போது எனக்கு சிரிப்பாத்தான் வருது



ரோட்டிலே மனநலமற்றவற்றவர்களைக் காணும்போது நீங்கள் ஒரு கணம் ’அய்யோ பாவ’மென்று எண்ணுபவர்களா? இவர்களை இவர்கள் வீட்டில் தேட மாட்டார்களா அல்லது இவர்களுக்கான போக்கிடம் இல்லையென்று நினைப்பீர்களா? சமுத்ரகனியின் மனம் அவர்களுக்கான நிலையை எண்ணி துடித்ததும் உருவான புள்ளி போராளி. கூடவே ஹீரோவாய் தயாரிப்பாளர் சசிகுமாரும் கிடைத்துவிட அதிரடியாய் சசியின் பிம்பத்தை முன்வைத்து போராளியைக் கொடுத்து விட்டார்.



ஒரு நிமிசம்... காசு போட்டு கஷ்டப்பட்டு படம் எடுக்கறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து விமர்சனத்தை ஒழுங்கா எழுதலாமில்லை என்று சொல்பவர்கள் இங்கேயே போய்விடலாம். போராளி படத்தை நீங்கள் பார்த்து ஆற அமர அற்புதமான விமர்சனத்தைத் தரலாம்.



தமிழ் சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்குப் பிறகு அதிகம் சீரழிக்கப் பட்ட வார்த்தை தமிழ், தமிழன் பிறகு போராளியாகத்தான் இருக்கக்கூடுமென்று நம்புகிறேன்.



மாஸ்க் ஆஃப் ஸாரோவின் பண்டாரெஸ் போல ரெட்டைக் குதிரைகளின் மீது கால்களை வைத்து பயணிக்கும் படத்தின் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக நண்பனை அழைத்துக் கொண்டு தப்பித்து ஓடும் சசிகுமார் தமிழ் சினிமாவின் ஆதிகால வழக்கப்படி சென்னை வந்து சேர்கிறார். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்ற நாடோடிகளின் உயரிய கருத்தினால் நண்பனின் நண்பனான கஞ்சா கறுப்புவின் அறையில் அடைக்கலமாகிறார். போட்டுக்க மாத்துத் துணி கூட இல்லாம உள் நுழைந்தவர்கள் பெட்ரோல் பங்கில் பணிக்கு சேர்ந்து அருகில் குடித்தனம் இருப்பவர்களுக்கு உதவி செய்து, வாழ்வில் உயர்ந்து எல்லோரையும் மகிழ்வித்து பணக்காரனாக உயரும் சமயம்.. சத்தியமாய் எனக்கு விக்ரமனின் நினைவில் அழுகை முட்டிக் கொண்டது. அவரெல்லாம் எம்புட்டு சிம்பிளா ஒரே பாட்டுல ஹீரோவை பணக்காரரா மாத்திடறாரு. கனி ஏன் இடைவேளை வரைக்கும் அதை இழுத்தாரு.. இடைவேளையில் தப்பித்தவர்களைத் தேடிக் கொண்டு வில்லன் கும்பல் அரிவாளும் கம்புமாக சென்னைக்குள் நுழைய, மீண்டும் சசிகுமார் நண்பனுடன் ஓடுகிறார். போராளி அவர்தானென்று ஒருவழியாய் இடைவேளை என்ற ஸ்லைடு போடுமுன் நமக்கு நம்பிக்கையாக.. ஆர்வத்துடன் தம்மடிக்க வழித் தேடி கிடைக்காமல் மீண்டும் இருக்கையில் அமர...



அடுத்து வரும் காட்சிகளில் எனக்கு பாக்யராஜை நினைத்து அழுகை வந்தது. எங்க சின்ன ராசா என்ற படத்தைப் போல சொத்துக்காக மாற்றாந்தாய் மூத்த தார பையனை டம்மியாக்க, சொத்துக்கார பெரியப்பா சொத்துக்களை டம்மி பேரில் எழுதி வைக்க, அந்த சொத்திற்கு சொந்தமான நிலத்தின் அடியில் யுரேனியம் கிடைக்க, சொத்துக்காக சசி குடும்பத்தினர் செய்யும் கொடுமைகள் சசியை போராளியாக்குகின்றன. ஆக்கி, அடப்போங்க பாஸ்.. இதுக்கே நாக்கு தள்ளிப் போச்சு... ;((



ஆனாலும் விடாமல் தப்பித்து ஓடுபவர்களைப் பார்த்து ஹீரோயின் கேட்கும் ஒரே கேள்வியில் மனம் மாறி, எதிர்த்தவர்களைப் பந்தாடி உதைத்து அடித்து நொறுக்கி ரத்தம் பார்த்து.. ஜெயம் படத்துல பார்த்திருப்பீங்களே.. அதான் போ.. போ.. போஓஓஓ....



விமர்சனங்களுக்கான பதிலாய் சசி குமார் உங்களுக்கென்னப்பா தெரியும் கஷ்டம் என்ற வசனத்தை வைத்திருக்கிறார். கஷ்டப்படுறவங்களுக்குத்தானே அந்த வலி தெரியும் என்ற வசனம் படம் முடிந்து வெளியே வந்ததும் நினைவுக்கு வர, எனக்கும் கஷ்டம் தாங்கவில்லை. நிச்சயம் இதற்காகவாவது விமர்சனம் எழுதவேண்டும் என்று நம்பிக்கை கொண்டேன். கூடவே ஹீரோயின் ஆசையாய் பசியில் கேட்கும், சிலோன் புரோட்டாவுக்காக தன்னுடைய ஈழ பாசத்தையும் காட்டியிருக்கிறார். ததாஸ்து!



கடைசியாய் கஞ்சா கறுப்பு சொல்லும் வசனம்தான் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. ராவு ராவுன்னு ராவிட்டீங்களேடா!!! ஆனால் ரெண்டாம் பாகம் வந்துவிடுமோ என்ற பீதியைக் கொடுத்துத்தான் வெளியில் அனுப்பி வைத்தான் போராளி..



படம் பார்த்துவிட்டு இவற்றைத் தட்டச்சும்பொழுது இரண்டு விசயம் மனதில் நின்றன.



1. நிச்சயம் இது போன்ற கலைப் படைப்புகளிடமிருந்து தப்பிக்கவேனும். நாம் மிஷ்கினையும் செல்வராகவனையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.



2. புதியதாக வெளிவரும் தமிழ்ப்படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுதி எங்களை காக்கும் பதிவர்களுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். யப்பா சாமிங்களா! எங்களை மாதிரி ஆளுங்களுக்காக எம்புட்டு மொக்கைகளை நீங்க தாங்கறீங்களோ.. உங்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்!



போராளி - Bore எலி

(போராளி திரைப்படத்தின் பிரத்யேக இணையதளம்  - http://www.poraalimovie.com/)

இதை இதைப் பாத்துட்டுத்தான் ஏமாந்துட்டேன்....

Monday, August 16, 2010

ஹாலி பாலியின் ஒரு செம்ம ஜாலி ரைட்.....

17 comments
பொம்மைப்படங்கள் என்று என்னைப் போன்றோரால் அறியப்பட்டு வியப்புடன் பொம்மைகளின் சாகசத்தைப் பார்த்த படத்தில் எனக்குப் பிடித்தது மான்ஸ்டர்’ஸ் இன்க்.. (நான் முதலில் பார்த்த 3டி திரைப்படம் - டிவிடியில்). டாம் அன் ஜெர்ரி, கார்ட்டூன் நெட்வொர்க் வகையறாக்கள் எல்லாம் மனதை வியாபித்திருந்தும் இந்தத் திரைப்படம் மிகவும் பிடித்துப் போனதற்கான அர்த்தம் அறிந்திருக்கவில்லை. அதற்குப் பின்பு ஷ்ரெக், ஐஸ் ஏஜ், ரோபோட்ஸ், ஷார்க் டேல் (எல்லாமே டிவியில்தான்) என்று கலந்துகட்டி பொம்மைத் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தாலும், கார்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமே எனக்கு பிக்ஸாரின் பெயர் அறிமுகமானது. அதன் பின் சற்று மறந்திருந்த வேளையில் வால் ஈ மனதை அதகளம் செய்தது. எப்படியெல்லாம் பொம்மைப்படத்துல யோசிக்கறாய்ங்கய்யா என்ற ஆச்சரியத்தில் வாய் பிளந்திருந்தவனை இன்னும் பெரியதாய் வாய் பிளக்க வைத்த ஒரு தொடர் நண்பர் பதிவர் ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் ஸ்டோரி. ஹாலிவுட் பாலாவின் விமர்சனத்தில் இழையோடு அபரிமிதமான நகைச்சுவைக்காகவும், திரைப்படங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகவும் பதிவைப் படிக்க ஆரம்பித்து விடாமல் தினமும் அவரிடமிருந்து ஏதும் புதிய இடுகை வந்துள்ளதா என்று தேட  வைக்குமளவு பிடித்த எழுத்தாளராகிப்போனவர்.


The Pixar Story (2007) என்ற டாகுமெண்ட்ரி, DisneyWar என்ற புத்தகம், இணையப் பக்கங்கள், டிவிடி எக்ஸ்ட்ராஸ், ப்ரொடக்‌ஷன் நோட்ஸ் போன்றவற்றிலிருந்து தகவல்களையும், புகைப்படங்களையும் சேகரித்து (காப்பியடித்து என்பதன் நாகரிக ஃபார்ம்), கடும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஆஃபீஸில் ஃப்ரீயாக இருக்கும் போது என் ப்லாகில் அக்டோபர் 2009-ல் எழுதியது

ஒரு சோறு பதத்திற்கான பத்தி மாத்திரமே மேற்கண்டது.....


மின்னணு வடிவிலான புத்தகங்களில் பெரும்பாலும் அச்சுவடிவில் முதலில் ஏற்றப்பட்டு பின்னர் மின்னணு வடிவிலும் வாசிப்பிற்கு தரப்படுவதுண்டு. முதன்முறையாக அச்சு ஊடகத்திற்கு சற்றும் தகுதிகுறைவில்லாத ”பிக்ஸார் ஸ்டோரி” தொடர் மின்னிதழாக வெளிவந்திருக்கிறது. அவர் கூறும் காரணத்தில் எனக்கு மிகப்பிடித்த ஒன்று வாசிப்பை மிகச்சிலருக்கேனும் பரவலாக்குதல் மாத்திரமல்ல.. மரங்களை காப்பாற்றுதலும்.. ஹேட்ஸ் ஆஃப் ஹாலி...



”ஓவர் நைட்ல பெரியாளாட்டான்ய்யா.. என்ற வசனத்தின் பின்னால் இருக்கும் உழைப்பைக் குறித்த பாலாவின் வர்ண கதகளி ஆட்டம்தான் மின்னிதழாய் வெளிவந்துள்ள இந்த பிக்ஸாரின் தொடர்.. இதன் பின்னால் மறைந்திருக்கும் பாலாவின் தனிப்பட்ட நேர்த்தி அசாதாரணமானது.

சுஜாதாவின் வெற்றிக்கு காரணமாகக் கூறும் எல்லோரும் (சுஜாதா எழுதுவதெல்லாம் எழுத்தா என்று கருதுவோரும்) அவருடைய எளிய மொழியமைப்பையும் புதிய விசயங்களை அனைத்து வாசகருக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்வதையும் மறக்க மாட்டார்கள். அந்த வகையில் ஹாலிவுட் பாலாவின் இந்த பிக்ஸார் தொடரும் மிக எளிமையாக அனிமேசன் டெக்னாலஜியைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்களையும் சுவாரஸ்யமாய் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில் பதிவில் தொடராக்கப்பட்ட ஒன்று. சிமுலேசன் மற்றும் அனிமேசன் வேறுபாடு, , ரே டிரேசிங்.. என்ற பலவித டெக்னாலஜி சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தகுந்த குறிப்புகளுடன் எளிமையா விளங்க வைக்கிறது. கூடவே பிக்ஸார் பட்ட கஷ்டங்கள் குறித்த பார்வையும் அடேங்கப்பா! போட வைக்கிறது.

முழுக்க முழுக்க பதிவில் எழுதப்பட்ட விசயங்களில் பதிவுலகம் தொடர்பான வார்த்தைகளையும் இட்டு சக பதிவர்களின் பதிவுக்குறிப்புகளையும் தந்து அநாயசமாக அதிவேக ஜெட் வேகத் தொடராய் தந்திருக்கிறார்.

பிக்ஸாரின் ஆரம்ப காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு இன்றைய தினம்வரையிலான (15/08/2010) அனிமேஷன் திரைப்படங்களில் பிக்ஸார் என்ற குழந்தைகளைப் பித்துப் பிடிக்க வைத்த பூதத்தின் கதையை அழகாக விவரிக்கிறது. பத்து திரைப்படங்கள்... அந்த பத்து திரைப்படங்கள் வெளிவரும் சமயத்திலிருந்த பிக்ஸாரின் சூழல்கள்.. அவர்களின் அனிமேசன் சிரமங்கள்.. மற்றும் அனிமேசன் பற்றிய கருத்துக்களை எளிமையாக தகுந்த குறிப்புகளுடன் இணைத்து தொடரை சிறந்த மர்ம நாவலுக்கு இணையான விறுவிறுப்பாய் நகர்த்திச் செல்கிறது பாலாவின் எழுத்துக்கள். கூடவே இணைப்பாக இதுவரை பிக்ஸாரிலிருந்து வந்த குறும்படங்கள் பற்றிய தொகுப்பையும் தந்திருக்கிறார்.

(இன்றைய தேதியில் அனிமேசன் திரைப்படங்களில் உலகில் அதிக வசூல் செய்த படம் பிக்ஸாரின்  - டாய் ஸ்டோரி 3.. உய்..உய்.. உய்..)

அனிமேசன் திரைப்படங்களைப் பொழுதுபோக்குச் சித்திரங்களாகப் பார்க்க ஆரம்பித்து அதன் நுண்ணிய கதையமைப்பில் வியந்து பொம்மைகளுடன் பொம்மைகளாய் ஒன்றரை மணி நேரம் செலவழித்தலை மிக மகிழ்வாய்க் கொண்டாடும் மனங்களுக்காக அத்திரைப்படங்களின் பின்னணியில் பட்ட பாடுகளை நகைச்சுவைத்தொனி படர்ந்து தொடரை மின்ன வைத்ததில் பாலாவின் பங்கு சிறப்பான ஒன்று.. (ரொம்பப் பெரிய வாக்கியம்.. இதுக்கே பாலா கோச்சுக்குவாரு..)

எந்த இலக்கியமும் சிறந்த இலக்கியமாய்த்தான் மலருமென்று நம்பிக்கையில் எழுதப்படுவதில்லை. வாசிப்பையும், அதனைக் கொண்டாடும் மனநிலையும் மாத்திரமே இலக்கியமாய் அறியச் செய்கிறது. அவ்வகையில் பிக்ஸார் ஸ்டோரி பற்றிய இந்த மின்னிதழும் ஒரு விமர்சன இலக்கியத்தில் புதிய வகையைக் கொள்கிறது. கொண்டாட்ட மனநிலையை வாசிக்கும் பொழுது தரும் நிறைவான தொகுப்பு.

மின்னிதழ் குறித்த விமர்சனம்தானே என்று பெரிதாய் கூறாமல் போய்விட்டதாய் நினைக்கவேண்டாம். ஏனெனில் நீங்கள் வாசித்துப் பார்க்கும்பொழுது மாத்திரமே இதன் சுவையை அறியமுடியும் என்பதால்.

சிலர் கூறுவது போன்று ஓசியில ப்ளாக் கிடைச்சிடுச்சுங்கறதுக்காகல்லாம் எழுத ஆரம்பிச்சிடுறாங்க என்ற விமர்சனத்திற்கும், சினிமா விமர்சனம் எழுதுவதற்கு இலக்கியத் தகுதி வேண்டும் என்று கருதுபவர்களும் ஹாலிவுட் பாலாவின் சில சினிமா விமர்சனங்களையாவது படித்து மகிழ வேண்டுகிறேன். நிச்சயம் இலக்கியத்தரமானதாய் இருக்குமென்று நினைக்கவேண்டாம்.... அதைவிட மிகச் சிறப்பாய் இருக்கும்.

மின்னிதழ் குறித்த விமர்சனத்தில் பாலாவினைப் பற்றி சற்று மிகையாக எழுதப்பட்டிருப்பதாய் கருதினால்.... கருதுங்கள்.. நிச்சயம் அதற்கு மிகத்தகுதியான ஒருவர்தான் ஹாலிவுட் பாலா! 

மின்னிதழை தரவிறக்க இங்கு செல்லவும்.. 

ஹாலிவுட் பாலாவின் பதிவு

*
*
*

Saturday, August 07, 2010

எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.... - 6

8 comments
இழந்த காதல்

நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்


============ 


ஒரு வேண்டுகோள்

விடைபெறும்போது
இம்முறையும்
உள்ளிருந்து
உன் குரல் சொல்கிறது
‘போகும்போது கதவைச்
சாத்திக்கொண்டு போ’

ஓர் எளிய வேண்டுகோள்
என்றாலும்
அது என்னை
அமைதியிழக்கச் செய்கிறது

=========

தன் வழியே

தானியக் குதிருக்குள்ளே
ஒரு பிரியம்
மெல்ல முளை கட்டுகிறது

அதற்கு
வெளிச்சமில்லை
காற்று இல்லை
பற்றிக்கொள்ள
ஒரு பிடி நிலமில்லை
தனது ஈரத்தைத் தவிர
அதற்கு ஒன்றுமேயில்லை

ஆனால்
பிடிவாதமாக
அது வெளியேறிக்கொண்டிருக்கிறது

===========

கேட்காததும் சொல்லாததும்

கேட்பாய்
கேட்பாய் என
சொல்லாதிருந்தவை

சொல்வாய்
சொல்வாய் என
கேட்காதிருந்தவை

வேறொன்றுமில்லை
இரகசியமென்றும்
இடைவெளியென்றும்

=========== 


ஓர் அற்புதத்திற்காக

ஓர் அற்புதத்திற்காகக் காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை

அற்புதங்கள் இனி நிகழாதென்றே
சகுனங்களும் சொல்கின்றன

ஆனால்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்
ஒரு கணம்

==========

தீண்டல்

நீ அமர்ந்து சென்ற இருக்கைகளில்
துணி விரிப்புகள் கலைவதில்லை

தவித்து அருந்திய
தண்ணீரில் ஒரு திவலை சிந்தியதில்லை

இந்தச் செடிகள் பூக்காதென்றபோதும்
கிள்ளக் கண்டதில்லை ஓரிலையை

வெளிச்சம் குறைந்த அறையொன்றில் நீ
வந்ததற்கும் போனதற்கும் நடுவே
எதுவும் இடம் மாறியிருக்கவில்லை

இருந்தும்
எப்படியோ வந்துவிட்டிருக்கிறது
ஒரு பெரிய வருத்தம்


===========  

கசங்குதல்

இன்று
உன்னுடையது போலவே இல்லை
உன் பிரியம்

என்றாலும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீண்ட நாட்களின்
நீண்ட வெயிலில்
ஓர் உணர்வு
எப்படி கசங்குகிறதென்று

ஒரு மலர் கசங்குவதுபோலவோ
ஒரு துணி கசங்குவதுபோலவோ
ஒரு காகிதம் கசங்குவதுபோலவோ
இல்லை அது


===========

அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டுவந்த
எல்லாவற்றையும்
எடுத்துக்கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டுவராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.


===========



இன்னும் கொஞ்ச தூரம்

வந்து நேரமாகிவிட்டது

அப்புறமும்
கொஞ்சம் இருந்துகொண்டிருக்கிறோம்
ஒரு சூழலாக

இல்லை
ஒரு பருவமாக


====================

மனுஷ்யபுத்திரனின், “நீராலானது” கவிதைத் தொகுப்பிலிருந்து 

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com