உங்களையெல்லாம் பாக்கும்போது எனக்கு சிரிப்பாத்தான் வருது
ரோட்டிலே மனநலமற்றவற்றவர்களைக் காணும்போது நீங்கள் ஒரு கணம் ’அய்யோ பாவ’மென்று எண்ணுபவர்களா? இவர்களை இவர்கள் வீட்டில் தேட மாட்டார்களா அல்லது இவர்களுக்கான போக்கிடம் இல்லையென்று நினைப்பீர்களா? சமுத்ரகனியின் மனம் அவர்களுக்கான நிலையை எண்ணி துடித்ததும் உருவான புள்ளி போராளி. கூடவே ஹீரோவாய் தயாரிப்பாளர் சசிகுமாரும் கிடைத்துவிட அதிரடியாய் சசியின் பிம்பத்தை முன்வைத்து போராளியைக் கொடுத்து விட்டார்.
ஒரு நிமிசம்... காசு போட்டு கஷ்டப்பட்டு படம் எடுக்கறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து விமர்சனத்தை ஒழுங்கா எழுதலாமில்லை என்று சொல்பவர்கள் இங்கேயே போய்விடலாம். போராளி படத்தை நீங்கள் பார்த்து ஆற அமர அற்புதமான விமர்சனத்தைத் தரலாம்.
தமிழ் சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்குப் பிறகு அதிகம் சீரழிக்கப் பட்ட வார்த்தை தமிழ், தமிழன் பிறகு போராளியாகத்தான் இருக்கக்கூடுமென்று நம்புகிறேன்.
மாஸ்க் ஆஃப் ஸாரோவின் பண்டாரெஸ் போல ரெட்டைக் குதிரைகளின் மீது கால்களை வைத்து பயணிக்கும் படத்தின் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக நண்பனை அழைத்துக் கொண்டு தப்பித்து ஓடும் சசிகுமார் தமிழ் சினிமாவின் ஆதிகால வழக்கப்படி சென்னை வந்து சேர்கிறார். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்ற நாடோடிகளின் உயரிய கருத்தினால் நண்பனின் நண்பனான கஞ்சா கறுப்புவின் அறையில் அடைக்கலமாகிறார். போட்டுக்க மாத்துத் துணி கூட இல்லாம உள் நுழைந்தவர்கள் பெட்ரோல் பங்கில் பணிக்கு சேர்ந்து அருகில் குடித்தனம் இருப்பவர்களுக்கு உதவி செய்து, வாழ்வில் உயர்ந்து எல்லோரையும் மகிழ்வித்து பணக்காரனாக உயரும் சமயம்.. சத்தியமாய் எனக்கு விக்ரமனின் நினைவில் அழுகை முட்டிக் கொண்டது. அவரெல்லாம் எம்புட்டு சிம்பிளா ஒரே பாட்டுல ஹீரோவை பணக்காரரா மாத்திடறாரு. கனி ஏன் இடைவேளை வரைக்கும் அதை இழுத்தாரு.. இடைவேளையில் தப்பித்தவர்களைத் தேடிக் கொண்டு வில்லன் கும்பல் அரிவாளும் கம்புமாக சென்னைக்குள் நுழைய, மீண்டும் சசிகுமார் நண்பனுடன் ஓடுகிறார். போராளி அவர்தானென்று ஒருவழியாய் இடைவேளை என்ற ஸ்லைடு போடுமுன் நமக்கு நம்பிக்கையாக.. ஆர்வத்துடன் தம்மடிக்க வழித் தேடி கிடைக்காமல் மீண்டும் இருக்கையில் அமர...
அடுத்து வரும் காட்சிகளில் எனக்கு பாக்யராஜை நினைத்து அழுகை வந்தது. எங்க சின்ன ராசா என்ற படத்தைப் போல சொத்துக்காக மாற்றாந்தாய் மூத்த தார பையனை டம்மியாக்க, சொத்துக்கார பெரியப்பா சொத்துக்களை டம்மி பேரில் எழுதி வைக்க, அந்த சொத்திற்கு சொந்தமான நிலத்தின் அடியில் யுரேனியம் கிடைக்க, சொத்துக்காக சசி குடும்பத்தினர் செய்யும் கொடுமைகள் சசியை போராளியாக்குகின்றன. ஆக்கி, அடப்போங்க பாஸ்.. இதுக்கே நாக்கு தள்ளிப் போச்சு... ;((
ஆனாலும் விடாமல் தப்பித்து ஓடுபவர்களைப் பார்த்து ஹீரோயின் கேட்கும் ஒரே கேள்வியில் மனம் மாறி, எதிர்த்தவர்களைப் பந்தாடி உதைத்து அடித்து நொறுக்கி ரத்தம் பார்த்து.. ஜெயம் படத்துல பார்த்திருப்பீங்களே.. அதான் போ.. போ.. போஓஓஓ....
விமர்சனங்களுக்கான பதிலாய் சசி குமார் உங்களுக்கென்னப்பா தெரியும் கஷ்டம் என்ற வசனத்தை வைத்திருக்கிறார். கஷ்டப்படுறவங்களுக்குத்தானே அந்த வலி தெரியும் என்ற வசனம் படம் முடிந்து வெளியே வந்ததும் நினைவுக்கு வர, எனக்கும் கஷ்டம் தாங்கவில்லை. நிச்சயம் இதற்காகவாவது விமர்சனம் எழுதவேண்டும் என்று நம்பிக்கை கொண்டேன். கூடவே ஹீரோயின் ஆசையாய் பசியில் கேட்கும், சிலோன் புரோட்டாவுக்காக தன்னுடைய ஈழ பாசத்தையும் காட்டியிருக்கிறார். ததாஸ்து!
கடைசியாய் கஞ்சா கறுப்பு சொல்லும் வசனம்தான் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. ராவு ராவுன்னு ராவிட்டீங்களேடா!!! ஆனால் ரெண்டாம் பாகம் வந்துவிடுமோ என்ற பீதியைக் கொடுத்துத்தான் வெளியில் அனுப்பி வைத்தான் போராளி..
படம் பார்த்துவிட்டு இவற்றைத் தட்டச்சும்பொழுது இரண்டு விசயம் மனதில் நின்றன.
1. நிச்சயம் இது போன்ற கலைப் படைப்புகளிடமிருந்து தப்பிக்கவேனும். நாம் மிஷ்கினையும் செல்வராகவனையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
2. புதியதாக வெளிவரும் தமிழ்ப்படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுதி எங்களை காக்கும் பதிவர்களுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். யப்பா சாமிங்களா! எங்களை மாதிரி ஆளுங்களுக்காக எம்புட்டு மொக்கைகளை நீங்க தாங்கறீங்களோ.. உங்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்!
போராளி - Bore எலி
(போராளி திரைப்படத்தின் பிரத்யேக இணையதளம் - http://www.poraalimovie.com/)
இதை இதைப் பாத்துட்டுத்தான் ஏமாந்துட்டேன்....






