Monday, March 30, 2009

முனியாண்டி விலாஸ் - 2

13 comments
புனைவின் க‌டைசி ம‌னித‌னுக்கான‌ த‌னித்த‌ தேவ‌தை!

அவ‌ள் மிக‌ க‌ளைத்திருந்தாள். அவ‌ளுக்கான‌ பொறுப்புக‌ள் இல்லாத‌ நிலையில் தேவ‌தைப்ப‌ட்ட‌ம் சும‌ந்து கொண்டிருப்ப‌து போல் தோன்றிய‌து. அவ‌ளுடைய‌ ப‌ழுப்பு நிற‌த்தில் மெல்லிய‌ க‌ருவ‌ண்ண‌ம் பூசப்ப‌ட்டிருந்த‌ இற‌க்கைக‌ளில் இருந்த‌ சிற‌குகள் தீயினால் பொசுங்கி காண‌ப்ப‌ட்ட‌‌ன‌. உடைக‌ளின் நீல‌ம் வெளிறியிருந்த‌து. த‌ண்ணீரைக்க‌ண்டால் மிக‌ துக்க‌ப்ப‌டுப‌வ‌ளாக‌ இருந்தாள். தூக்க‌ம் பீடித்த‌ க‌ண்க‌ளுட‌ன் ஒரு இட‌த்தில் த‌ங்குவ‌த‌ற்கான‌ ம‌ன‌நிலையை தொலைத்த‌வ‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்தாள். வ‌ர‌ங்களுக்கும் சாப‌ங்க‌ளுக்கும் வித்தியாச‌ம் தெரியாத‌வ‌ளாகவும் ப‌ற‌த்தல் செய‌லை முற்றிலும் ம‌றந்த‌வ‌ளாக‌வும் இருந்தாள். தேவ‌தை த‌ன‌து கூட்ட‌த்தை புனைவுல‌க‌ம் முழுவ‌துமாக‌ தேடி அலுத்திருந்தாள். அதிக‌ம் ஆர்வ‌ப்ப‌டும்போது நீண்ட கூர்மையான அலகுகள் கொண்டதும் த‌லையில் வித்தியாச‌மான‌ கிரீட‌ம் போன்ற‌ அமைப்புடைய‌தும் பெரிய‌ இற‌க்கைக‌ளுடைய‌துமான‌ சிவ‌ப்பு நிற‌ ப‌ற‌வையை வ‌ரைந்து அத‌ற்கு உயிர் கொடுத்து பேசிக்கொண்டிருப்பாள். சில‌ நேர‌ங்க‌ளில் அந்த‌ ப‌ற‌வையை த‌ன்னை விட்டு ப‌ற‌ந்து போகும்ப‌டியும் வேண்டிக்கொள்வாள். த‌ன‌க்கொரு சுமையாக‌ இப்ப‌ற‌வை இருப்ப‌தாக‌வும் த‌ன்னை விட்டு இது நீங்கும்போது வ‌ருத்த‌ம் சற்று குறையும் என்றும் அழுதாள். நான் அவ‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்தும் எண்ண‌த்தில் அவ‌ளை ஆறுத‌ல்ப‌டுத்த‌ முய‌ன்ற‌பொழுது இவ‌ள‌து இந்த‌ நிலைக்கு என்னை கார‌ண‌ம் சொல்லி குற்ற‌ஞ்சாட்டினாள்.

தேவ‌தைக‌ளின் சிற‌ப்பாக‌ நான் அறிந்திருந்த‌து அவ‌ர்க‌ளின் க‌ன‌வுக‌ளைத்தான். தினம் க‌ன‌வுக‌ளில் பூக்கின்ற‌ கிடைக்கின்ற‌ பூக்க‌ளை ப‌டுக்கையிலிருந்து ப‌றித்தெடுத்து த‌ங்க‌ளை அழ‌குப்ப‌டுத்திக்கொண்டிருந்த‌ தேவ‌தைக‌ள் இருந்த‌ உல‌க‌த்தில் நான் க‌ண்டிருக்கும் எல்லா தேவ‌தைக‌ளும் ஏதோ ஒரு வித்தியாச‌ப்பூவை கையில் ஏந்தியிருந்த‌ன‌ர். தின‌ம் மாறும் காட்சிபோல‌ பூக்க‌ளின் நிற‌ங்க‌ளிலும் வ‌டிவ‌ங்க‌ளிலும் மாற்ற‌ம் கொண்டிருக்கும். ஆனால் இவ‌ள் க‌ன‌வு காணாத‌வ‌ளாய் இருந்தாள். ய‌தார்த்த‌ புத்த‌க‌த்தின் ப‌க்க‌ங்க‌ளின் வ‌ரிசை மாறாம‌ல் இருக்கின்ற‌ ச‌ம‌ன்பாடாய் அவ‌ள் செய‌ல்க‌ள் இருந்த‌ன‌. தேவ‌தைக‌ள் க‌ன‌வு காணாவிட்டால் க‌தைக‌ள் தீர்ந்துவிடும் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்குள் நிர‌ம்பியிருந்த‌து.

தேவ‌தையின் விசும்ப‌ல் ஒலி அட‌ங்க‌வில்லை. மெல்ல‌ ச‌ப்த‌ம் வெளியில் ந‌க‌ர்ந்து வெளியில் எதிரொலித்து வெளியிலேயே தீர்ந்திருந்த‌து. ச‌ப்த‌ம் என்மேல் ஊர்ந்து என்னை தாண்டி செல்கின்ற‌ ச‌ம‌ய‌த்தின் நிமிட‌ங்க‌ளில் என‌க்கான‌ துய‌ர‌ங்க‌ளும் அதில் க‌ல‌ந்திருந்த‌தை என்னால் உண‌ர‌ முடிந்த‌து. அப்போது என் இதயத்தின் பாரம் அதிகரித்து தலைகுனியச்செய்தது.

புனைவுலகில் தன்னந்தனியனாக அலைந்து கொண்டிருக்கும் அவனுக்கான தேவதையாகத்தான் அவள் இருந்து வந்தாள். ஒவ்வொரு உயிருக்கும் வீதம் குறிப்பிட்ட இருப்பிற்கான அலகிற்கிணங்கி இவள் வந்திருக்கக்கூடுமென்று நான் எண்ணினேன். தனித்திருப்பது மாத்திரம் இவளது கடினமாக இருக்குமென்று என்னால் கருதவியலவில்லை. ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு மாறாக அவளது கனவுகள் விரிந்திருந்ததை நான் அறிந்த போது எனது நிச்சயத்தன்மை அதிகம் சரிந்து விழுந்திருந்தது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

அவள் சிரித்தபடியே இருந்தாள். எங்காவது மழை பெய்திருக்கக்கூடும். மழைத்துளிகளுடன் ஊடே மின்னல் கீற்றுகள் நனையாமல் கிடைத்திருக்கும். எனக்குப்பிடித்த ஐயிதழ் கொண்ட வெள்ளைநிற ஒற்றைப்பூ காம்பில் முளைத்ததும் புதுமழையில் நனைந்திருக்கும். பறவைகள் தங்கள் கூடுகளில் சேர்ந்திருக்கும்.

“ம்.. அப்புறம்...”

“கடைசியா எனக்கு லவ் லெட்டர் கொடுத்தது ஐஸ்வர்யாராய்”

“ஐஸ்வர்யாராயா..!?” அவள் சிரிப்பை மறைக்க முயன்றும் அவளது கன்னங்கள் காட்டிக்கொடுத்தன.

“ம்.. நான் பவானிக்கு அந்த பேருதான் வச்சிருந்தேன்.”

“ம். சரி.. அப்புறம்”

“அவ அபிஷேக் பச்சனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா”

“அபிஷேக் பச்சன்??”

“ம்.. கோமதியை கல்யாணம் செஞ்சுக்கிட்டானே நடராஜன். அவனுக்கு நான் வச்ச பேரு”

நாங்கள் நின்றிருந்தது முனியாண்டி விலாஸ் கடையின் வெளியே. ஊரின் பேருந்து நிலையத்தின் இரண்டாம் நுழைவு வாசலின் எதிரே சிகப்பு நிறப்பின்னணியில் வெளுத்திருந்த மஞ்சள் நிற எழுத்துக்களால் ஆர்ட் மதி என்று வரைந்தவரின் பெயரை கீழே கொண்டிருந்த கொஞ்சம் துருப்பிடித்திருந்த பலகைக்கு இடது ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த காய்ந்த மல்லிகைச்சரம் தாங்கியிருந்த கருத்த மூங்கிலுக்கு பக்கத்தில் நின்றிருந்தோம் நானும் அவளும்.

“டீ சாப்பிடுறியா..”

வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தாள். இந்த இடத்தில் நின்று பேசுவது அத்தனை சரியில்லைதான். ஆனாலும் பேருந்துக்கு காத்திருக்கும் நேரம்தான் கிடைக்கிறது அவளுடன் பேசுவதற்கு.

“சரி. வேற...” பேருந்துக்கான வருகையை எதிர்பார்ப்பது போல எதிர்பக்கம் பார்வை வீசினாள். எனக்குத்தெரியும். நாங்கள் பேசுவதை வேறு யாரும் கவனிக்கிறார்களா என்ற எச்சரிக்கை அவளுக்கு. நான் இதில் அத்தனை கவலைப்பட்டதில்லை.

“இந்த மாதிரிதான் ஊர்ல எல்லோருக்கும் ஒரு பேரு வச்சிருக்கேன். காந்தி, நேரு கூட எனக்கு தோஸ்த்துன்னா பார்த்துக்கயேன்”

என்னைத்தவிர்த்து பார்வை திருப்பிய அவளது தயக்கம் என்னை தொட்டது. யோசிக்கிறாள். புதிதாய் கேள்வி அனுப்ப யோசிக்கிறாள். இவளது நிமிட நேர யோசனைகள் என்னை முட்படுக்கையில் ரத்தம் காண வைக்கும் தன்மை கொண்டது.

எனது கண்களை நேராக உற்றுப்பார்த்தாள்.

“அப்ப எனக்கு என்ன பேரு வச்சிருக்க”

அவளது முகம் வட்ட வடிவமானது. நெற்றியின் சிறிய பரப்பை மறைத்துவிடத்துடிக்கும் காற்றில் அலையும் முன் முடிகள். வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பை கொண்ட இமைகளில் சிக்காது தப்பி நிற்கின்ற பெரிய கண்கள் சற்று களைத்திருந்தது. இறக்கைகளை கழற்றிவிட்டு வந்திருக்க வேண்டும்.

நான் ரகசியம் கூறும் பாவனையில் அவள் காதோரம் குனிந்து அவளது கேச வாசனையில் மயங்கி மெல்லிய குரலில் கூறினேன்.

“தேவதை...”

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

மிகக்கடினமாக இருந்தது. தேவதை இன்னமும் என் முன்னால்தான் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் தனித்திருப்பது பற்றிய கவலை அதிகரித்துக்கொண்டிருந்தது. அவனை இயல்பான பருவத்திலிருந்து நீக்கி இளைஞனாக்கி காட்டியது அவன் மழலைத்தன்மை அறியாதது அவனுக்கான கதைகளை கனவுகளை தேவதையால் அவனுக்கு உணர்த்த முடியாமல் இருப்பது மிக முக்கியமாய் அவன் யாரையும் காதலிக்காதது இவையெல்லாம் தேவதைக்கு மிகுந்த இழப்புகளாக பட்டது.

தனியானவனாக அவன் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் நான் என் புனைவுலகில் யாரையும் அனுமதித்ததில்லை. இவன் தனித்திருந்தான். இவனுக்கான தனித்த தேவதையாய் இவள் இருக்கிறாள். தேவதையையும் நான் இங்கு உருவாக்கவில்லை. தன்னிச்சையாக வந்திருக்கின்றாள். இவளது சாபமாயும் இருந்திருக்கக்கூடும். தேவதைகள் இல்லாத தேசம் காணாதவன் என்பதால் என்னால் அவளை மாத்திரம் அனுமதிக்க முடிந்திருந்தது.

கொடுந்தயக்கத்துடன் தேவதை என்னிடம் அந்த கேள்வியை கேட்டாள்.

“நீ இவனைக் கொன்னுடறியா?”

(தொடரும்)

முனியாண்டி விலாஸ்

38 comments
........
........
உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மைகளை

நன்றி- சல்மா
பச்சை தேவதை கவிதைத்தொகுப்பிலிருந்து


ஒவ்வொரு நொடிகளின் நகர்விலும் அவன் வளர்ந்து கொண்டிருப்பதாக தோன்றியது. இது நிச்சயம் நல்லவிதமான செயல் என்று என்னால் நிம்மதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. நல்ல நாகரிகத்தின் அடிப்படை அம்சத்தின் முதல் விதியாய் மனிதன் வளர்தலை நியாயப்படுத்தியதிலிருந்து எல்லாம் தொடங்கியிருக்கக்கூடுமென்று நினைக்கத்தொடங்கினேன். வளர்தல் சிந்தனைகள் மையப்புள்ளி குவிவட்டம் கோளவிளிம்பு எல்லாமே தனித்து இயங்கி நீடுயராமல் பக்கவாட்டில் காற்றடைத்தது போல் வீங்கிக்கொண்டிருந்தது. ஒன்றுக்கொன்று இடித்து மோதி நகர்வை விரும்பியதன் காரணமாய் அழிந்தது என்ற வரலாற்றை நான் இனிதான் எழுத ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதனை நிகழ்வு குறிப்பாக கொள்ள முடிகின்ற நேரமுடிவின் ஆரம்பத்தில் அவன் தனித்திருந்தான். இந்தப்புனைவின் கடைசி மனிதன். இதனாலேயே அடுத்த தலைமுறைக்கான வரலாறாயும் அவனைப்பற்றிய சுய விவர குறியீட்டின் படிமமாயும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.


பெயர்கள் சூட்டுவதில் இருக்கின்ற சுவாரசியம் மற்றவர்களுக்கானதாக அமைகின்றது. மற்றையோர் இவனது பெயரை உச்சரித்தலில் இவன் மனம் மயங்குவதாயும் இவனது கவனம் சிதறுவதாயும் கொண்ட மனநிலையுடன் ஒத்திருப்பதால் இவனுக்கான பெயரை நான் முன்மொழியவில்லை. பெயர்கள் தங்கள் உரிமைகளை அதிகம் உபயோகித்துக்கொள்ளும் சொல்வழியாக அமைகின்றன. இவனைத்தவிர வேறு யாரும் இல்லாத இடத்தில் இவனுக்கு பெயர் சூட்டுவது எழுத்தின் வழியை திறந்து வைப்பதற்காகவே ஒழிய வேறு எந்த கருமத்திற்கும் இல்லை.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

முன்பு இறந்து போயிருந்த ஒரு கதையை உயிர்ப்பிப்பதற்காக வேண்டி அதில் மூவரை புதிதாய் இணைத்திருந்தேன். ஒரு அழகான பெண்ணையும் (பெண் அழகாக இருக்கிறாள் என்பதை வாசகப்பிரதிகளுக்கு உணர்த்துவதற்கான இணைப்பு வழி இது) இரு முட்டாள் ஆண்களையும் (ஆண்கள் முட்டாள்களாகியிருந்தததை சொல்ல வேண்டிய அவசியம் பெண்களுக்கு உபயோகப்படாவிட்டாலும் பிரதியின் குறியீட்டிற்கான வசியத்தன்மைக்காக எழுதப்படுகிறது) உருவாக்கி விட்டும் அவர்களுக்கான பெயர்களை நான் தரத்தொடங்கவில்லை. அவன், இவன், இவள்தான்..


அந்த அவன் இவள் மேல் மையல் கொண்டு காதலிக்கத்தொடங்க, இந்த இவளோ இவனை விரும்பத் தொடங்கியிருந்தாள். ஆனால் இந்த இவன் தன்னுடைய மூலப்பிரதியில் தான் யாராக இருக்க முடியும் என்ற ஆசையில் முடிவிலாது நீண்டிருந்த எழுத்துக்களில் தன்னைத்தேட தொடங்கியிருந்தான். தனக்கொரு பெயர் சூட்டிக்கொள்ளும் ஆசையில் மாத்திரமே இவன் இத்தகைய நிகழ்வை தொடங்கியிருப்பதாக நான் கருதியதால் இவனது போக்கிற்கு நான் தடை விதிக்கவில்லை. ஆனால் நிகழ்விற்கு எதிர்கோளாக மூலப்பிரதியில் காணப்பட்ட ஒவ்வொருவரின் பிரதிநிதித்துவ இயல்பிலும் செய்கையிலும் இவன் மயங்கி தன்னையும் அதுபோல் மாற்றிக்கொள்ள திருத்தம் மேற்கொண்டிருந்த நிலையில் இவனுக்கான தனித்துவம் என்ன என்பதை இவன் மறந்தான். இவனது இந்த தீவிர தேடுதல்களில் இலக்கிய வாசிப்பாளர்களால் மிகவும் ஆராதிக்கப்பட்டிருந்த அந்த செத்துப்போயிருந்த மூலப்பிரதியில் பிழைகள் ஏற்படத்தொடங்கியது. எழுத்துக்களில் உட்புகுந்து தன்னை தேடுவதும் வரிகளை முன்பின்னாக கலைத்துப்போட்டுச் செல்வதுமாக இருந்த பிரதியின் தன்மைக்கு என்னை காரணம் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல்கள் கண்டங்கள் கருத்துக்கள் நிலவத்தொடங்கின.


நான் எதிர்பாராதவிதமாய் இவை நிகழ்ந்தது என்றும் இதற்கான சாத்தியக்கூறுகளின் தன்மைக்கும் இவனின் பிறழ்வுக்கும் எழுத்துச்சிதறலும் அந்த மூலப்பிரதியின் கதாபாத்திரங்களே காரணம் என்றும் நான் சுயவிளக்கம் கூறி எழுதியிருந்த கடிதத்தின் மேல் சாணி பூசப்பட்டு அழகான வண்ணமிகு பூக்கள் வரையப்பட்ட காகித மேலுறையில் சுற்றப்பட்டு பின்னல் முடிச்சுகள் இடப்பட்டு தெளிவான தபால் முத்திரையுடன் அஞ்சல் வழி எனக்கு வந்து சேர்ந்தது.


அந்த மிக நீண்ட பத்தாயிரத்திற்கும் அதிக பக்கங்கள் கொண்ட மூலப்பிரதியின் காவியத்தன்மையில் இவன் அலைந்து திரிந்த பக்கங்களிலும் வரிகளிலும் வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் உண்டான பிழைகளை திருத்தும்நோக்கில் நேரும் களங்கத்தை துடைப்பது அத்தனை எளிதாயில்லை. எதிர்நாயகனின் காமத்தன்மையிலும் நாயகனின் காதல் தன்மையிலும் ஈடுபாடு கொண்டிருந்த இவன் தனக்கான சுயமாக இரண்டிலும் மையம் கொள்ளாது போக்குகளின் பாதையில் சென்றிருந்தான். அவை க‌டும் போர்க‌ள் நிக‌ழ்ந்த‌ இடத்தில் மீண்டெழுந்த துரோகங்களையும், த‌லைவ‌ன் த‌லைவியின் மேல் காத‌ல் கொண்டு வெதும்பி நின்றிருந்த‌ தோல்வியில் த‌ன‌து காம‌த்தை பிறிதோர் துணை மேல் ஏற்றி வைத்து துய‌ர் நீக்கிய‌ ப‌டியினையும் இவ‌ன் எழுத்துக்க‌ளில் ஒளிந்திருந்த‌ சூட்சும‌த்தை க‌ண்ட‌றிந்த‌து அதிர்ச்சிய‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

புனைவின் க‌டைசி ம‌னித‌ன் இன்ன‌மும் அம்ம‌ண‌மாக‌த்தான் அலைந்து கொண்டிருந்தான். உல‌க‌ம் அவ‌னுக்கான‌ மிக‌ப்பெரிய‌ புதிய‌ ப‌ழ‌த்தை ஒத்திருந்த‌து. மிகுத‌ல்க‌ள் தோலென‌வும் காற்றை மாத்திர‌ம் சுவாசித்தும் அவ‌ன் இன்ன‌மும் அலைந்து கொண்டிருந்தான்.மிக‌ப்பெரிய‌ ம‌ண் மூடிய‌ அதிக‌ம் கேடு விளைவிக்கும் காற்றுட‌ன் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌ காற்றும் சேர்ந்திருந்த‌ அந்த புனைவு உல‌கில் உடைக‌ளுக்கான‌ அவ‌சிய‌மோ நாண‌ம் என்ற‌ பொருள்சொல்லியின் விள‌க்க‌மோ அவ‌ன் அறித‌லுக்கு அத்த‌னை ஒத்திசைந்த‌தில்லை என்ப‌த‌னால் அவ‌னை இன்ன‌மும் நிர்வாண‌மாக‌வே அலைய‌ வைத்துக்கொண்டிருந்தேன். இதிலொரு ந‌ன்மையாக‌ அவ‌ன் விரும்பிய‌ இட‌த்தில் மூத்திர‌ம் விட‌வும் அல்ல‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூத்திர‌ம் பெய்துகொண்டே ந‌ட‌க்க‌வும் ப‌ழ‌கியிருந்தான். உடைக‌ள் இருந்திருந்தால் பாழாகியிருக்கும் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ ம‌னித‌னுக்கான‌ புதிய‌ மொழியை தோற்றுவித்த‌ல் மிக‌ அவ‌சிய‌மாய் இருந்த‌து. இவ‌னுக்கு உப‌யோக‌ப்ப‌டாவிட்டாலும் இவ‌னைப்ப‌ற்றி ப‌டிப்போர் இவ‌னுக்கான‌ மொழிய‌றிவு இருந்த‌து என்று காட்டிக்கொள்ள‌ச்செய்வ‌து ந‌வ‌ந‌ம்பிக்கையை ச‌ற்று அதிக‌ரிக்கும் என்று தோன்றிய‌து.புதிய‌ உல‌க‌ம் புதிய‌ மொழி வித்தியாச‌ எழுத்து. ஆனால் ச‌ற்றுக்க‌டுமையாக‌ ஒரு விச‌ய‌த்தில் நான் கெடுதிய‌ளித்த‌து க‌ட‌வுளைத்தான். அவ‌னுக்கான‌ எந்த‌ ஒரு புதிய‌ க‌ட‌வுளையும் நான் எழுதி வைத்தோ வ‌ரைந்து கொடுக்க‌வோ இல்லை. இந்த‌ கொடுமையின் கார‌ண‌மாக‌வே நான் சாத்தானின் அம்ச‌ம் என்று வ‌ன்ம‌ம் கொள்ள‌ வாய்ப்புக‌ள் நிறைந்திருந்த‌ன‌. க‌ட‌வுளே இல்லாத‌ இட‌த்தில் சாத்தானுக்கு வேலை இல்லை என்றும் நான் நினைத்துக்கொண்டேன்.



(தொட‌ரும்)

Friday, March 06, 2009

காத‌ல்சொல்லிக‌ள்!!

16 comments
இருப்பிடம் தொலைத்தலை சுவாரசியமாக்கிக்கொள்ளுதலைப் போன்ற சநீதங்கள் பற்றுதல்களில் அவளுக்கு ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. 'நான்' எனப்படுதலையே அங்கீகாரத்தின் உச்சதம் எண்ணப்படுகையில் இருக்கின்ற எனக்கெல்லாம் அவளது அங்கீகார மறுப்பு நிச்சயம் அலுப்பைத்தான் மேலும் மேலும் உண்டாக்கி என்னை என்மேல் பரிதாபப்பட வைக்கின்றது. எனக்கான நிலைமறுத்தல்களின் நம்பிக்கைக்கொள்ளுதலில் அவள் ஓவியம் வரைந்து மேல் துப்பிய எச்சிலை துடைக்கும் செயலில் ஓவியம் அழியும் சாத்தியம் உள்ளது. அவள் என் மேல் வரைந்த பிம்பங்களில் எனது மெய்ப்பிரதியை தூய்மையாக்குதலில் ஈடுபாடு காட்டுதலும் பிரதிகளின் நகல்களுக்கு அவளது பெயரை வைத்துக்கொண்டாடுவதும் காதல் தோல்வியுற்ற குடிகாரனின் வாயிலிருந்து மிச்சப்பட்ட எச்சில் மண்ணில் விடுவித்தலிற்கு நிகரானது.

பின்னிரவுகள் எனப்படும் விடிகின்ற பொழுதிற்கு அல்லது நான் இயல்பாய் எழும்பொழுதிற்கு மாறுபட்டு தூக்கம் கலைகின்ற சமயங்களுக்கும் நான் அவளை நிச்சயம் காரணம் சொல்ல முடிகிறது. அவளைப்பற்றிய மாறுபட்ட பல சிந்தனைகளின் மையப்புள்ளி எதன் மீதும் நிலைகொள்ளாது கண்ணின் அருகை மைத்தொட்டு நிரப்பிய இரவு உலகமாய் விரிகின்றது. அந்த சமயத்தில் கிடைக்கின்ற வார்த்தைகளை அவளுக்கான கவிதைகளாக மாற்றி அதனை மீண்டும் திரும்பி படித்துப்பார்க்கையில் எழுத்துக்களின் வன்மையில் அவள் மீதான என் காதலை விட அவள் என்னை விரும்பியிருக்கின்றாள் என்ற நம்பிக்கையே உச்சமாய் இருக்கின்றது.

அக்கவிதைகள் எனது காதல் தோல்விக்கான மாறாது அவளது காதலை நான் ஏற்றுக்கொண்ட அற்புதக்கணத்திற்கான மாறுபாடின் துவக்கமாய் இருக்கின்றது. அற்புதக்கணங்கள் கிடைத்தல் அரிது என்று நிச்சயம் எனக்கு தெரிந்திருப்பதால் அந்த துவக்க நிமிடங்களை, வினாடிகள் உட்பட பத்திரப்படுத்தி வருகின்றேன். அவளுக்கு என்றாவது எனது வாழ்த்தாக நான் அதை அனுப்பி வைக்க வேண்டும். வழக்கம்போல உள்ளுக்குள் சிரித்துவிட்டு நகர்ந்து செல்வாள் என்று எனக்கு தெரியும் என்ற எண்ணம்தான் நான் அதை அனுப்பதலை தாமதப்படுத்துகின்றன.

மூன்றாம் பரிமாணப்பார்வைகள் கொள்வதற்கான கருத்துக்களம் எங்கள் இருவருக்குமான பொதுத்தளமாக அன்று மாறியிருந்தது. சமூகப்பார்வை என்பதை தவிர்த்தலில் இருக்கின்ற நியாயங்கள் அவளுக்கு ஏற்புடையதாயில்லை. ஒரு தேவதையாக எனது காதலியை உருவகப்படுத்திய அதிர்வுகள் அவளைப் பாதிக்கின்றன. வழமையான சிந்தனைகளில் நான் மூழ்கிக்கிடப்பதாகவும் அதில் மிதக்கின்ற அசுத்தங்களில் எனது பங்கும் இருப்பதாக குற்றம் சொல்லுகின்றாள். எழுந்து செல்லும் யவனியின் ஈரத்துணியில் தெரிகின்ற அங்கத்தில் மிச்ச உடம்பில் அவளுக்கு வால் இருக்கின்றதா என்று நான் தேடுகிறேனா என்று எனக்காக ஒரு ஒற்றனை நியமித்தலில் அடுத்த கட்டமாய் அந்த ஒற்றனின் பணி விசுவாசம் நம்புதலுக்குரியதாயோ போற்றுதலுக்குரிய நியதிகள் இல்லாமல் இருந்ததாலோ மீண்டும் அந்த ஒற்றனை வேவு பார்த்தலுக்கு அவளே கிளம்பி வந்திருந்தாள். வேவு பார்த்தலின் விதிகளில் எனது இயல்பு இயக்கங்கள் பாதிப்படைந்திருந்தன. ஒற்றைப்பெண்ணொருத்திக்காகவும் உலகம் இயங்கும் என்ற நம்பிக்கையின் ஆதாரங்கள் இன்னும் பழுதடையாத காரணத்தில் நான் கொண்ட பிடிவாதத்திற்காக என்னை வேவு பார்த்தவனிடம் எனக்கான காதலை சுமந்து செல்ல‌ தூதுவ‌னாக்கினேன். அவ‌ன் அத‌ற்காக‌ வ‌ர‌வில்லையென்றும் த‌ன‌து ஒற்றுத்தொழிலுக்கு ஏற்ப‌ட்ட‌ இழ‌ப்பாக‌வும் இதைக்க‌ருதி ம‌ர‌ண‌த்தை நாடினான். என‌து காத‌லிற்காக‌ இழ‌க்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் உயிர் இது என்ப‌தால் இத‌னை ப‌திவு செய்த‌லும் வ‌ர‌லாற்றில் அவ‌னை ஏற்றி வைத்த‌லிலும் முக்கிய‌க்கார‌ணியாக்கிக் கொண்டிருக்கின்றேன்.

இந்த இடத்தில் 'அவன்' என்பது நானாக என்னிடம் பிரித்திருந்த பிரதியின் நகல் என்பது இங்குத்தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.

அவளுக்குப்பிடித்தவனாய் நான் நடிக்க வேண்டிய கடினங்களின் இடையூறாக நகலின் பிரதியை உண்டாக்கியிருந்தேன். எனது பிரதியை அதனது நகல் ஒற்றுப்பார்த்து அவளுக்கு நல்லவிதமாய் எந்த விவரமும் சொல்லாதது ஏன் என்பதை அறிவதற்காக மேலும் பிரதியையும் நகலையும் பிரதியின் நகலையும் நகலின் பிரதியையும் நகலின் நகலையும்...... இப்ப இங்க நான் காணாம போயிட்டேன்டி..

மூன்றாம் அடுக்கில் மிச்ச‌ம் தொங்கிய‌ அந்த‌ கொத்துப்பூவின் வாச‌ம் அவ‌ளுக்கு பிடித்திருக்காது என்ற‌ எண்ண‌ம் அது ப‌றிக்க‌ப்ப‌டாம‌ல் இருப்ப‌தால் ம‌ட்டுமே.

மேலுள்ள‌ வ‌ரிக‌ளை ச‌ரியான‌ வ‌ரிசையில் அடுக்கிப்பார்த்தால் ந‌ல்ல‌ க‌விதை கிடைக்க‌க்கூடும். க‌விதை எழுத‌லின் சாத்திய‌க்கூறு விதிக‌ள் என்னிட‌மிருந்து தொலைந்து விட்ட‌ப‌டியால் என‌து வ‌ரிக‌ள் இடைவெளி தொலைந்து ஒன்றுட‌ன் ஒன்று ஏறி மிதித்து சாகும் நிலையில் இருக்கின்ற‌ன‌. அப்ப‌டியே விட்டு விடுவ‌து புதுக்க‌விதை ஒன்று கிடைக்காம‌லிருக்க‌ வ‌ழி செய்யும்.

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com